Tuesday, August 27, 2019

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று

படி படி காலை படி


நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி 

காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் )

கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? ( நூலைப் )

பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப் )

தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி ( நூலைப் )

Saturday, August 24, 2019

கொஞ்சி விளையாடும் தமிழ்

உவமைகளுக்கு உவமையில்லை

உவமை அணி என்பது கவிதைக்கு அலங்காரமாக அமைந்து அழகுபடுத்துகிறது என்பார்கள். ஆனால் கவிதையின் உறுப்பாகவே அமையும் உவமைகளே உண்மையில் அழகானவை; பொருத்தமானவை. சங்க இக்கியத்தில் உவமைகள் சிறப்பாக விளங்குவதற்கு இதுவே காரணம். புறநானூற்றில் அழகும் புதுமையும் மிக்க பல நல்ல உவமைகளைக் காணலாம். சில எடுத்துக் காட்டப்படுகின்றன.
* கடைகோல் உள்ளிருக்கும் கடு நெருப்பு
ஒரு நல்ல மன்னன் மிகக் கொடியவனாகவும் இருக்கிறான். பகைவரைக் கொன்று அவர்களின் நாட்டை நெருப்புக்கு இரையாக்கும் இரக்கம் இல்லாத செயல்களைச் செய்கிறான். அவனே தன் குடிமக்களை அருள்மிக்க தந்தையைப்போல் காக்கவும் செய்கிறான். இனிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறான். குளிர்ந்த நிழல்போல் பாதுகாக்கிறான். புலவர்க்கும் கலைஞர்க்கும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குகிறான். ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இந்த இரு மாறுபட்ட பண்புகளும் ஒரு சிறந்த தலைவனிடம் இருக்கின்றன. 
தலைவனின் இந்த இரட்டைப் பண்பை உணர்த்த ஒளவையார் கூறும் உவமை வியக்கத் தக்கது; புதுமையானது; பொருத்தமானது. அந்தக் காலத்தில் நெருப்பை உண்டாக்குவதற்கு ஒரு கருவி இருந்தது. ஒரு குழிவான மரத்துண்டின் மீது ஓர் உறுதியான மரக்கோலை அழுத்தமாய் நட்டு மிக விரைவாகக் கடைவார்கள். அதிலிருந்து நெருப்புப் பொறி வெளிப்படும். தீக்கடைகோல் என்பது அக்கருவியின் பெயர். சங்க காலத் தமிழர் அதை ஞெலிகோல் என்றனர். ஒளவையார் அதியமானுக்கு அந்தத் தீக்கடை கோலை உவமையாகக் கூறுகிறார். "ஓலை வீட்டின் கூரையில் தீக்கடை கோல் செருகி வைக்கப் பட்டு உள்ளது. முறையாக அதைப் பயன்படுத்தும் போது உணவு சமைக்க, குளிர்காய, விளக்கு ஏற்ற என்று வீட்டாருக்குப் அது பயன்படும். அது கூரையை எரித்து விடுகிறதா? இல்லையே ! ஆனால் அதனை முறையின்றிக் கையாளும் போது, நெருப்பை உமிழ்ந்து மாடமாளிகையைக் கூடச் சுட்டு எரித்துவிடும் இல்லையா? அதியமான் பகைவரை அழிப்பதில் அத்தகைய கடும் சினம்மிக்க வீரனாம்.
இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றுஅதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்தான் தோன்றும் காலே

(இல் இறை = வீட்டுக்கூரை, கான்று படு கனை எரி = மூண்டு எரியும் பெருந்தீ)

'அமைதியாய் இருந்தால் இருப்பான், சினம் கொண்டு சீறினால் அழித்து விடுவான்' என்பதை இந்த உவமை எவ்வளவு அழகாய் உணர்த்துகிறது 

Friday, August 23, 2019

இரட்டைப் புலவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்த  ஆமிலந்துறை  என்ற ஊரில் பிறந்து  வாழ்ந்தவர்கள்


இவர்கள் பாடிய அம்மானைப் பாடல்கள் சிலேடை நலம் மிக்கவை.

அம்மானை என்பது மூன்று பேர் வட்டமாக அமர்ந்துகொண்டு நான்கு பந்துகளைப் பக்கத்தில் இருப்பவரிடம் தூக்கிப் போட்டு பந்து கீழே விழாமல் விளையாடும் ஒருவகை விளையாட்டு. மூவரும் ஒவ்வொருவராகப் பாடிக்கொண்டே அம்மானைப் பந்துகளையும் ஆடவேண்டும்.

இப்படி அம்மானை ஆடும் பாடல்தான் அம்மானைப் பாடல்.


தென் புலியூர்த் தில்லைச்சிற் றம்பரத்தே
வெம்புலியொன் றென்நாளும்  மேவுங்காண் அம்மானை
வெம்புலியொன் றென்நாளும் மேவுமே  யாமாகில்
அம்பலத்தை விட்டே  அகலாதோ அம்மானை !
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை ‘

வியாக்கிர பாதர் என்பவர் ஒரு சித்தர்.
அரிய வகைப் புத்தம்புது பூக்களால் சிவபெருமானை பூசனை செய்துவந்தார்.
பூக்களை மரத்தில் ஏறிப் பறிப்பதற்காக புலிக்கால் நகங்களைச் சிவபெருமானிடம் வரமாப் பெற்றார்.
அதனால் அவரைப் புலிக்கால் முனிவர் என்றனர்.
இவர் தென்புலியூர் கோயிலிலேயே தங்கிவிட்டார்.

பாடல் சொல்கிறதுந
தில்லை (சிதம்பரம்) சிற்றம்பலத்தில் விரும்பதக்க புலி வாழ்கிறது – அம்மானை
அது அம்பலத்தை விட்டு அகலாதோ – அம்மானை
ஆட்டை விட்டு வேங்கை அகலுமோ – அம்மானை
சிவபெருமான் ஆட்டத்தைக் காண்பதை விட்டுவிட்டு வேங்கைப்புலி அகலுமோ
ஆடு = ஆடுதல்
ஆடு = ஆடு என்னும் விலங்கு
ஆட்டைப் பிடித்துத் தின்னுவதை விட்டுவிட்டு வேங்கைப்புலி அகலுமோ?
இப்படி இரட்டுற மொழியப்பட்ட பாடல் இது.

மற்றொரு அம்மானைப் பாடல்
கச்சி ஏகாம்பர நாதரைப் பாடிய கலம்பகத்தில் உள்ளது.

ஏகாம்பரம் = ஏக அம்பரம் = ஒரே வானவெளி = ஒரே ஆகாசம்
ஆகாயமே சிவபெருமான் மேனி.
காஞ்சி காமாட்சி எகாம்பர நாதரைத் தழுவினாள்.
அவளது முலை ஏகாம்பரர் மார்பில் வடுவை உண்டாக்கிவிட்டது.
இது கதை.

ஆகாயத்தில் காயம் உண்டாக்கமுடியாதே.
எப்படி வடுப் பட்டது? – இது வினா

ஏகாம்பர நாதர் கோயில் காவல்மரம் மாமரம்.
மாமரத்தடியில் மாவடு விழாதா என்பது விடை.

வடு = தழும்பு – சிவபெருமான் கதையில்
வடு = மாவடு – கோயில்மரம் (தல விருட்சம்)

எண்ணரிய காஞ்சில்வாழ் ஏகாம்பர நாத
அண்ணல்திரு மேனிஎங்கும் ஆகாசம் அம்மானை!அண்ணல்திரு மேனியெங்கும் ஆகாசம் மாயின்
வண்ணமுலை மார்பில் வடுப்படுமோ அம்மானை?மாவடியில் வாழ்பவருக்கு வடுவரிதோ அம்மானை! 

Thursday, August 22, 2019

சிறுபாணாற்றுப்படை

அடுத்த சில வரிகளில் விறலியரின் கூந்தல் (முடி) முதல் பாதம் (அடி) வரை புலவர் நத்தத்தனார் வருணனை செய்துள்ள அழகு நயமாக உள்ளது.

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்   15
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என   20
மால் வரை ஒழுகிய வாழை வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி  (13-22)

ஐது வீழ் இகு பெயல்
உலகிற்கு அருள் செய்ய வல்லமெல்லியதாய் வீழ்கின்ற மழையைப் போன்ற அழகு உடைய கருமையான கூந்தல்.
மென்மெய்யாக வீழ்கின்ற மழைஅருள் செய்கின்ற மழை போன்று அவள் கூந்தல் இருக்கிறதாம்.

இங்கு ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 3ம் பாடலில் “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து… என்று தீங்கில்லாமல் பெய்யும் மழை கூறப்பட்டுள்ளது நோக்குதற்குரியது.
கெடுக்கும் மழையை நாமறிவோம் அல்லவா?

விறலியரின் கூந்தலை மழை மேகம் என்று மயில்கள் நினைத்தன. அதனால் மகிழ்ச்சியாகத் தம் தோகையை விரித்து ஆடின. அவர் கண்கள் நீலமணி போன்றவைஎயிறு என்றால் பல். நுங்கின் இனிய நீர் போன்று சுவையை உடையதாக எயிற்று நீர் அமைந்துள்ளது. ஓடி இளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கைப் போன்ற பாதம். சிலம்பு முதலிய அணிகலன்கள் ஏதும் இன்றி அழகற்று இருக்கிறது. இப்படி கேசாதிபாதம் விறலியரின் அழகு வர்ணிக்கப்படுகிறது.வருமையும் காட்டப்படுகிறது.

இத்தகு அழகு வாய்ந்த விறலியரின் மென்மையான இயல்பையும் புலவர் குறிப்பிடத் தவறவில்லை. விறலியர்முல்லை சான்ற கற்பும்மெல்லியல்பும்மான் நோக்கும்,வாள் (ஒளி பொருந்திய) நுதலும் உடையவர் என்பதை,

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
என்னும் அடிகள் சுட்டுகின்றன.

இங்கு பாடினியின் அழகுக்கு புலவர் காட்டும்அடுக்கி வரும் உவமைஅடுக்குவமை புதுமையானதும் அறிந்து மகிழத்தக்கதுமாகும்.

மழை போல் கதுப்பு
கதுப்பு போல் மயில்
மயில் போல் சாயல்
சாயல் போல் நாய்நாக்கு
நாய்நாக்கு போல் (கால்)அடி
அடிதோயும் யானைக்கை போல் குறங்கு (கால்தொடை)
குறங்கு போல் உயரும் வாழை
வாழைப்பூ போல் ஓதி (கொண்டை)
ஓதி போல் பூக்கும் வேங்கை
வேங்கைபு பூ உதிர்ந்து கிடப்பது போல் மேனியில் சுணங்கு
சுணங்கணிந்த கோங்கம் பூ போல் முலை
முலை போல் பெண்ணை (பனங்காய்)
பெண்ணை நுங்கு போல் வெண்ணிற எயிறு (வெண்பல்)
எயிறு போல் குல்லைப்பூ
குல்லை போல் முல்லை
முல்லை சான்ற கற்பு
இப்பாணர்கள் வறுமைக் காரணமாக விரலியருடன் தமக்கு யாரேனும் உதவமாட்டார்காளா என்று எண்ணியவாறு பாலை நிலம் தாண்டி இரவல் பெறும் நோக்கோடு போகிறார்கள்.


மெதுவாகத் துளித்துளியாக மழை பெய்கின்ற காலத்துத் தோன்றுகின்ற மேகத்தின் அழகினைப் பெற்றிருக்கும் எண்ணெய் தேய்க்கப்பட்ட இருண்ட கூந்தலினை உடையவள் விறலி. நீல மணிபோலும் நிறமுடைய தோகையினை ஆண்மயில்கள் பலவும் சேர்ந்து விரித்து ஆடியபோதும் இவளின் (விறலியின்) கூந்தல் அழகினுக்கு ஒப்பாகாமைக் கண்டு வெட்டகமுற்று, பெண்மயில்கள் கூட்டத்தினுள் சென்று மறைவதற்குக் காரணமான அழகினை உடையவள். பனஞ்சிறாம்பு நிறமுடைய ஓடி இளைத்த நாயின் நாக்குப் போல நல்ல அழகினைப் பெற்று, அணிகலன்கள் அணியப்பெறாதப் பாதத்தினைக் கொண்டவள். பாதத்தினைத் தொடர்ந்து கருமையான பெண் யானையின் தரையில் படுகின்ற துதிக்கை போல், ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடையினை உடையவள். இவளின் கூந்தல் முடிப்பு, மேகங்கள் தங்குகின்ற மலையில் உள்ள வாழை மரத்தின் பூப்போன்றது

Thursday, August 1, 2019

தாயுமானஸ்வாமி, தாம் உயர்ந்த துறவு பூண்டிருந்த போதிலும், இதைனப் பின்வரும் பாடலில் அங்கீகாரம் செய்கிறார். அதாவது, முற்றிலும் அங்கீகாரம் புரிய
வில்லை. துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்ததென்று அவர்  உரைத்துவிடவில்லை. முக்திக்கு இரண்டும் சமசாதனங்கள் என்கிறார்.
தாயுமானவர் சொல்லுகிறார் -

''மத்த மத கரி முகிற் குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடு தோய்
மாடகூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணிமேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கத்துடன் முத்து நகையார்களொடு
முத்து முத்தாய்க் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலைநின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நுழை நூழை கொண்ட
கான மலை யுச்சியிற் குகை யூடிருந்து மென்?
கர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுய்வர் காண்!
ஜனகாதி துணிவி தன்றோ?
சர்வபரிபூரண அகண்டதத்துவமான
சச்சிதானந்த சிவமே''

இதன் பொருள் யாதெனில் =

'மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய
மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய
தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில்
இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக் கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி
முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர்
உண்மை கூறுகின்றோம். 
'சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்' இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடுபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத
மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?'

இங்ஙனம், இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும், கூறும் வேறு சில
துறவிகளைப்போலே சொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோக்ஷத்துக்குச் சமமான சாதனங்கள் என்று சொல்லியதே நமக்குப் பெரிய ஆறுதலாயிற்று. சம்சார

துறவிகளுக்குள்ளே பட்டினத்துப் பிள்ளை சிறந்தவரென்று தாயுமானவர் பாடியுள்ளார். அந்தப் பட்டினத்துப் பிள்ளை என்ன சொல்லுகிறார்?

"அறந்தா னியற்றும் அவனிலுங் கோடியதிக மில்லந்
துறந்தான் அவனிற் சதகோடி யுள்ளத் துறையுடையான்
மறந்தா னறக் கற்றறிவோ டிருந்திரு வாதனையற்
நிறந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியே கம்பனே"

இல்லத் துறவைக் காட்டிலும் உள்ளத் துறவு சககோடி மடங்கு மேலென்று மேலே பட்டினத்தடிகள் சொல்லுகிறார். பட்டினத்தடிகள் தாம் துறவியாதலால்
இங்ஙனம் கூறினார்

Tuesday, July 23, 2019

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பு சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!

அன்பும்,சிவமும் வேறானவை என்று ஒருவர் சொன்னால்,அவர் ஒன்றும் அறியாதவர் ஆவார்.அன்புதான் சிவம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.அன்புதான் சிவனை அறியும் வழி என்பதை ஒருவர் அறிந்த பின் அன்பானவராய் இருப்பார்.சிவத்தன்மை அடைவார்


Friday, July 19, 2019

திரு அருட்பா - வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார்

சக மனிதன் துன்பப் படுவதை கண்டும் கூட கண்டும் காணமல் போகும் காலம் இது. 

மனிதன் அல்ல, ஐந்தறிவு கொண்ட விலங்கு கூட அல்ல, தண்ணீர் இல்லாமல் வாடிய பயிரை கண்டு உள்ளம் வாடினார் வள்ளலார்.

மற்றவர்கள் துன்பத்தை கண்டு வருத்தப் படுவது எல்லோருக்கும் எளிதான ஒன்று தான்.

அந்த துன்பத்தை போக்க ஏதாவது செய்வது தான் கடினம்.

மனிதனுக்கு வரும் பெரிய துன்பம் பசி துன்பம் தான். அந்த துன்பத்தை போக்க வல்லாளர் அணையாத அடுப்பை கொண்ட உணவு சத்திரத்தை நிறுவினார்.

வடலூரில் அந்த உணவு சாலை இன்றும் இயங்கி கொண்டு இருக்கிறது. 

அவர் மறைந்த பின்னும் அவர் நிறுவிய அந்த சத்திரம் மக்களின் பசிப் பிணியை நீக்கிக் கொண்டு இருக்கிறது.

அவருடைய மனித நேயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.....





வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

------------------------------------------------------------------------------------

வாடிய பயிரைக் = நீரில்லாமல், வெயிலில் வாடிய பயிரை

கண்டபோ தெல்லாம் வாடினேன் = கண்டபோதெல்லாம் வாடினேன். எப்பவோ ஒருமுறை அல்ல, ஒவ்வொருமுறை வாடிய பயிரை கண்டபோதும் வாடினேன்


பசியினால் இளைத்தே = பசியினால் இளைத்து, உடல் மெலிந்து


வீடுதோ றிரந்தும் = வீடு தோறும் இரந்தும் (பிச்சை பெற்றும்)

பசியறா தயர்ந்த = பசி அறாது அயர்ந்த = பசி விலகாமல் சோர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் = ஒன்றும் இல்லாதவர்களை கண்டு உள்ளம் பதைத்தேன்

நீடிய பிணியால்= நீண்ட நாள் நோயால்

வருந்துகின்றோர் = வருத்தப் படுகிறவர்

என் நேர் உறக்கண்டுளந் துடித்தேன் = என் முன்னால் வரும் போது அவர்களை பார்த்து உள்ளம் துடித்தேன்

ஈடின் = ஒப்பு இல்லாத

மானிகளாய் = மானம் உள்ளவர்கள் கஷ்டப் பட்டாலும் மற்றவர்களிடம் போய் உதவி கேட்க மாட்டார்கள்.

ஏழைகளாய் = அப்படிப் பட்ட ஈடின் மானிகள் ஏழைகளாய்

நெஞ் சிளைத்தவர் = நெஞ்சம் இளைத்தவர்களை 

தமைக்கண்டே= அப்படி பட்ட மக்களை கண்டு 

 இளைத்தேன் = நானும் இளைத்தேன்

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...