Thursday, February 15, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்- 36

திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிய இப்பாடலில், தமிழின் விளையாட்டைப் பாருங்கள்
முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்
முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!
பத உரை
முத்தை = முத்துப் போன்ற முத்திச் செல்வத்தை
தரு = அளிக்கும்
பத்தித் திரு நகை = வரிசையாய் விளங்கும் பற்களை உடைய
அத்திக்கு = யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு
இறை = இறைவனே
சத்தி = சத்தி வேல் (ஏந்திய)
சரவண = சரவணபவனே
முத்திக்கு = வீட்டுப் பேற்றுக்கு
ஒரு வித்து = ஒரு வித்தே
குருபர = குரு மூர்த்தியே
என ஓதும் = என்று ஓதுகின்ற
முக்கண் பரமற்கு = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு
சுருதியின் = வேதத்தின்
முற்பட்டது = முற்பட்டு நிற்கும் பிரணவத்தை
கற்பித்து = கற்பித்து
இருவரும் = பிரமன், திருமால் ஆகிய இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து = முப்பது மூன்று வகையான
அமரரும்- தேவர்களும்
அடி பேண = (உனது)திருவடியை விரும்ப (அவுணருடன் போர் செய்த பெருமாளே)
பத்துத் தலை தத்த = (இராவணனுடைய) பத்து தலைகளும் சிதறும்படி
கணை தொடு = அம்பைச் செலுத்தியும்
ஒற்றைக் கிரி மத்தை = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு
பொருது = (கடலைக்) கடைந்தும்
ஒரு பட்டப்பகல் = ஒரு பட்டப் பகலை
வட்ட = வட்ட வடிவமாக உள்ள
திகிரியில் = சக்கரத்தினால்
இரவாக = இரவாகச் செய்தும்
பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் பாகனாகஇருந்த நடத்திய
பச்சைப் புயல் = பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்
மெச்சத் தகு பொருள் = மெச்சத் தகுந்த பொருளே
பட்சத்தொடு = (என் மீது) அன்பு வைத்து
ரட்சித்து அருள்வதும் = (என்னைக்) காத்தருளும்
ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?
தித்தித்தெய ஒத்து = தித்தித்தெய என்னும் தாளத்துக்கு ஒத்த வகையில்
பரிபுரம் = சிலம்பு (அணிந்த)
நிர்த்தப் பதம் வைத்து = நடனப் பதத்தை வைத்து
பயிரவி = காளி
திக்கு = திக்குகளில்
ஒட்க நடிக்க = சுழன்று நடிக்கவும்
கழுகொடு = கழுகுகளுடன்
கழுது = பேய்கள்
ஆட = ஆடவும்
திக்குப் பரி = திக்குகளைக் காக்கும்
அட்டப் பயிரவர் = எட்டு பயிரவர்கள்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு = தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு என வரும்.
சித்ர = அழகிய
பவுரிக்கு = மண்டலக் கூத்தை
த்ரிகடக என ஓத = த்ரிகடக என்று ஓதவும்
கொத்துப் பறை = கூட்டமான பறைகள்
கொட்ட = முழங்கவும்
களம் மிசை = போர்க் களத்தில்
குக்குக் குகு குக்குக் குகுகுகு- குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடி= இவ்வாறு ஒலி செய்து
முது கூகை = கிழக் கோட்டான்கள்
கொட்புற்று எழ = வட்டம் இட்டு எழவும்
நட்பு அற்ற அவுணரை = பகைவர்களாகிய அசுரர்களை
வெட்டிப் பலி இட்டு = வெட்டிப் பலி இட்டு
குலகிரி = குலகிரியாகிய கிரௌஞ்ச மலை
குத்துப்பட ஒத்து = குத்துப்படத் தாக்கி
பொர வ(ல்)ல = சண்டை செய்ய வல்ல
பெருமாளே = பெருமாளே

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...