Saturday, April 14, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 52


      உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
      உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
      உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
      உண்ணா முலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே.

......... சொற்பிரிவு .........

உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர்

உள் நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள்

உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில்

உண்ணா முலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே.

......... பதவுரை .........

உண் ... கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற,

ஆ ... பசு இனங்கள் (வாழ்கின்ற),

முலை ... முல்லை நிலத்திற்கு,

உ ... தலைவனாகிய திருமாலின்,

மை ... கருமை நிறத்தையும்,

மைந்து ... வலிமையும்,

ஆசு ... உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்),

அரண் ... கோட்டையாக உள்ள,

அம்பர் ... கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களின்,

உயிர் ... ஜிவனை,

சேர் ... மாய்த்து,

உள் ... தேவர்கள் உள்ளத்தில் இருந்த,

நாம் ... அச்சத்தை,

உளையும் ... போக்கி அழித்த,

ஐ ... தெய்வமே,

மை தா ... ஆட்டு வாகனத்தில் ஏறும்,

சர் ... உஷ்ணத்தை உடைய அக்னி தேவன்,

அண் ... சேர்ந்திருக்கும்,

நம் ... நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய,

அருணை வெற்பாள் ... அண்ணாமலையில் விளங்கி அருளும்,

உண் ... மிகுதியாகப்,

ஆம் ... பெருகும்,

முலையும் ... கற்புடமைக்கும்,

ஐ ... அழகிய,

மை ... அஞ்சனம் தீட்டிய,

தா ... செவிகளை எட்டிப் பிடிக்கும்,

சர ... விழிகளின்,

நந்தனமும் ... கிருபைக்கும்,

ஒப்பில் ... ஒப்புவமை இல்லாத,

உண்ணாமுலை உமை ... உண்ணாமுலை என்கிற பெயர் கொண்ட பார்வதியின்,

மைந்தா ... குமாரனே,

சரண் சரண் உனக்கே ... உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.

......... பொழிப்புரை .........

திருமாலின் நிறம் போல் கறுத்தும் வலிமையும் உவர்ப்புமுடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே, அக்கினியின் சொருபமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் கற்புடமைக்கும் ஒப்புவமை இல்லாத பார்வதி தேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...